An online book store
Use App for a better experience
banner

Maperum Sabaithanil [மாபெரும் சபைதனில்]

Author: Udhayachandhiran [உதயச்சந்திரன்]
icon

Rs. 370.50 + Shipping Charges

Price: Rs. 390.00 5% Offer
In stock.
v
Check delivery option
Availability

Frequently bought together

Publisher Vikatan Prasuram [விகடன் பிரசுரம்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 344
Product ID RMB282980

Maperum Sabaithanil [மாபெரும் சபைதனில்] 

இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு அது. இயற்கையின் எழிலும் செயற்கையின் பிரமாண்டமும் இணைந்த அந்தக் கடலோர நகரம், சனிக்கிழமை மதிய நேரத்திலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

சுவை மிகுந்த ஐரோப்பிய உணவு வகைகளுக்குப் பெயர்போன அந்த உணவகத்தில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண், இங்கிலாந்தைச் சேர்ந்தவர். யோகா பயிற்றுநர். விடுமுறை நாள்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்துச் செலவழிக்கத் துடிப்பவர், இப்போது, தான் விரும்பிய Barbeque உணவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய அலைபேசி ஒளிர்கிறது. எடுத்துப் பார்த்தால், அடையாளம் தெரியாத எண். அழைப்பைப் புறக்கணித்து கரீபியன், ஸ்பானிய உணவுப் பெயர் ஆராய்ச்சியில் மூழ்கிப் போகிறார். தொடர்ந்து ஒலிக்கிறது அலைபேசி. எடுத்து சலிப்புடன் பேசத் தொடங்கினால், மறுமுனை கேட்ட கேள்வி அவருக்கு அதிர்ச்சியைத் தருகிறது. `சென்ற புதன்கிழமை மாலை 6 மணி 47 நிமிடத்திற்கு நகரின் அந்தக் குறிப்பிட்ட சாலையில் ஒரு வாடகைக் காரில் பயணம் செய்தீர்களா?’ ஒரு நிமிடம் ஆடித்தான்போனார் அந்தப் பெண். சுதாரித்துக்கொண்டு அவர் அலைபேசிச் செயலியை ஒருமுறை சரிபார்த்தார்.கரின் அந்தக் குறிப்பிட்ட சாலையில் ஒரு வாடகைக் காரில் பயணம் செய்தீர்களா?’ ஒரு நிமிடம் ஆடித்தான்போனார் அந்தப் பெண். சுதாரித்துக்கொண்டு அவர் அலைபேசிச் செயலியை ஒருமுறை சரிபார்த்தார்.அது வெறும் ஆறு நிமிடப் பயணம் மட்டுமே. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையே’ என்று பதற்றத்துடன் பதில் அளிக்கிறார். `உடனடியாக உங்கள் வீட்டிற்குத் திரும்ப முடியுமா’ என்கிறது மறுமுனை. அடுத்த அரை மணி நேரத்தில் அந்தப் பெண்ணின் குடியிருப்பில் நுழைகிறது ஒரு அரசு வாகனம். சில நிமிடங்களில் அதிகாரத் தோரணையோடு ஒலித்த அழைப்பு மணி. கதவைத் திறந்தால் உடல் முழுக்கக் கவச உடையோடு மூன்று அலுவலர்கள். ``நீங்கள் பயணம் செய்த வாகன ஓட்டுநரைக் கொரோனா நோய் தொற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மீறினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை.” அதிர்ச்சியில் உறைந்த யோகா ஆசிரியரின் கண்கள் தொலைக்காட்சியை நாடுகின்றன. சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையின் உதவியோடு நோய்த்தொற்று பரவக் கூடியவர்களை எப்படிக் கண்டுபிடிக்கிறோம் என்று உயர் அரசு அலுவலர்கள் விலாவாரியாக விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம், கேளிக்கைகளுக்கு நடுவே கொரோனா வைரஸ் ஊடுருவியது எப்படி என்று மருத்துவர்கள் பேசுகிறார்கள். அடுத்த நொடியில் அந்நாட்டின் பிரதமர் திரையில் தோன்றி இந்த நோய்த்தொற்றைத் தடுக்க அந்நாட்டு அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்ற பட்டியலிடுகிறார். `வெளிநாட்டுத் தொழிலாளர் நலனும் இந்நாட்டுக் குடிமக்களுக்குச் சமமானதே’ என்ற உறுதியை அளிக்கிறார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், இந்த நோய்த் தொற்றால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து நுணுக்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரின் பெயர் `விவியன் பாலகிருஷ்ணன்’ என்று திரையில் தெரிகிறது. ஆம், அவர் சிங்கப்பூர் என்ற கனவு தேசத்தைச் சேர்ந்தவர்.

கண்ணுக்குப் புலப்படாத எதிரியோடு போரிடுவது எப்படி என்பதைக் கற்றுத்தேர்ந்த அந்தக் குட்டி தேசத்தின் வளர்ச்சி அபாரமானது. `தென்கிழக்காசியாவின் குப்பைத்தொட்டி’ என்று ஏளனம் செய்யப்பட்ட ஒரு சிறு நகரம், வெறும் ஐம்பதே ஆண்டுகளில் `கிழக்காசியப் பொருளாதாரப் புலி’ என்று புகழப்படுவது எப்படி? 200 ஆண்டுகளுக்கு முன் வெறும் 180 மீனவர்கள் சுற்றித்திரிந்த கடற்கரையில் இன்று 50 லட்சம் மக்கள் உலகத்தர வசதிகளோடு வாழ்வது எப்படி சாத்தியம்? மூன்றே வருடங்களில் வீழ்ந்து நொறுங்கிவிடும் என்று கணிக்கப்பட்ட ஒரு குட்டி தேசம், இன்று உலகமே வியந்து பார்க்கும் உயரத்தை எட்டிய அதிசயம் எப்படி நிகழ்ந்தது? கடந்த அறுபது வருடங்களில் வலிமையான தலைவர்களும், வல்லரசுகளும் தோன்றி மறைந்த உலக மேடையில், நிலையான ஆட்சி மூலம் சிங்கப்பூர் தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ரகசியம் என்ன?

இத்தனை கேள்விகளுக்கும் ஒரு பதில்தான். `லீகுவான்யூ.’ தொடர்ந்து 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமர்... பல்வேறு அரசுப் பொறுப்புகளில் 56 ஆண்டுகள் நாட்டை வழிநடத்தியவர். ஒரு சிறு துறைமுக நகரத்தை உலகமே வியக்கும் வகையில் உயர்த்திக் காட்டியவர். நான்கு தலைமுறைகளுக்கு முன் சீனாவிலிருந்து குடியேறிய குடும்பப் பின்னணி கொண்ட லீயின் குடும்பம் வசதியானதுதான். ஆனால் அவர் தந்தையின் சூதாட்டப் பழக்கத்தால் செல்வம் கரைந்திட, தாயின் சேமிப்புதான் அவரை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க அனுப்பியது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளைக் கண்கூடாகப் பார்த்துத் தாய்நாடு திரும்பியவர், அரசியலில் ஈடுபட்டதில் ஆச்சர்யமில்லை.

மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராக பாராளுமன்றம் நுழைந்தவர், 1959-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராகப் பதவியேற்கிறார். நாட்டின் நலன் கருதி மலேசியக் கூட்டமைப்பில் இணைந்த முயற்சி இரண்டே வருடங்களில் தோல்வியைச் சந்திக்கிறது. கூட்டமைப்பிடமிருந்து மலேசியப் பாராளுமன்றம் சிங்கப்பூரை வெளியேற்றுகிறது. கூட்டுக் குடும்பத்திடமிருந்து தூக்கியெறியப்பட்டு நடுத்தெருவில் தன்னந்தனியே போராட வேண்டிய சூழல் அது. உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்காத ஒரு சிறு துறைமுக நகரம் சிங்கப்பூர். அதற்கென்று ஒரு முழுமையான ராணுவம்... ஏன், காவல்துறைகூட முறையாகச் செயல்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. குடிக்கத் தண்ணீர்கூட இறக்குமதி செய்திட வேண்டும். சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துவந்த பிரிட்டன், தன் படைக்குடியிருப்பை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது கூடுதல் சிக்கலை உண்டாக்குகிறது. நிலவளம் இல்லாத ஒரு நாட்டின் இரண்டு லட்சம் மக்களோடு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி ஒரு தனி மனிதர் உறுதியோடு உழைத்து வென்ற வரலாறுதான் சிங்கப்பூரின் வெற்றிக்கதை.

 

சிங்கப்பூரின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில் அதன் புவியியல் அமைவிடம், மக்களின் கடுமையான உழைப்பு, நிலையான அரசியல் சூழல், ராணுவ ஒழுங்கோடு நடைபெறும் அன்றாட நிர்வாகம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு என்று அந்தப் பட்டியல் நீளக்கூடும். லீ குவான் யூவிடம் ஒருமுறை கேட்டபோது `சிங்கப்பூர் மக்களின் தன்னம்பிக்கைதான் காரணம்’ என்றார். ஆனால் உலகப் பொருளாதார வல்லுநர்களும், அரசியல் நிபுணர்களும் ஒரே ஒரு காரணியைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். அது லீ குவான் யூவின் தொலைநோக்குப் பார்வை.

மற்ற ஆசிய நாடுகள் எல்லாம் இடது மற்றும் வலதுசாரி சித்தாத்தங்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது, உலகளாவிய சந்தைப் பொருளாதாரம் மூலம் மக்கள் நலன் என்று இயங்கிய லீயை மற்றவர்கள் முதலில் சற்று விநோதமாகத்தான் பார்த்தார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலைகள் சிங்கப்பூரில் உருவாகி லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பை உருவாக்கின. சுற்றுலா மேம்பாடு குறைந்த முதலீட்டில் அதிக பலன் என்பதை உணர்ந்து செயல்திட்டம் வகுக்கப்பட்டது. தரமான சேவை, நிலையான அரசியலுடன் நேர்மையும் ஒழுங்கும் சேர்ந்துகொள்ள, பல நாடுகளிலிருந்தும் நிறுவனங்கள் சிங்கப்பூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டன. உலகெங்கும் பயணம் மேற்கொண்டு பன்னாட்டு முதலீட்டை ஈர்க்கப் பல முயற்சிகளை மேற்கொண்டது சிங்கப்பூர். ஒரே ஒரு வித்தியாசம். மற்ற ஆசிய நாடுகள் இன்று செய்வதை 50 ஆண்டுகளுக்கு முன்பே செய்தது அந்தக் குட்டி தேசம்.

இன்று உலகின் தலைசிறந்த நிதிநிர்வாக நகரங்களுள் ஒன்றாக சிங்கப்பூர் உருவான கதை சுவையானது. துறைமுக நகரத்தில் வணிகம் மட்டுமே சாத்தியம் என்றாலும், அதன் நவீன வடிவத்தைத் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு உருவாக்கிடமுடியாதா என்ற கனவு அவருக்கு. சிங்கப்பூர் அரசின் ஆலோசகர்கள் உலகம் முழுக்கச் சுற்றுகிறார்கள். லண்டனின் பங்குச் சந்தை நிபுணர் ஒருவர் கூறிய யோசனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அவர் சொன்னது `உலகின் பங்கு வர்த்தகமும், நிதி நிர்வாகமும் ஒவ்வொரு நாளும் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்தில் தொடங்குகிறது. பின்னர் ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட்... பின்னர் லண்டன் எனச் சில மணி நேர இடைவெளியில் தொடங்குகின்றன. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு நியூயார்க் நகரம் சுறுசுறுப்படைகிறது. பின்னர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ தொடர் ஓட்டத்தில் இணைகிறது. ஆனால் அதற்குப்பிறகு அடுத்த நாள் காலை சூரிச் நகரம் விழிக்கும் வரை உலக நிதி வர்த்தகம் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறது. எனவே இந்தக் கால இடைவெளியில் சிங்கப்பூர் இணைந்தால் 24 மணி நேரமும் உலகில் வர்த்தகம் நடைபெறும். உங்களால் முடியுமா” என்று கேட்கிறார். பொறி தட்டுகிறது லீ குவான் யூவிற்கு. உடனடியாய் நிதி மேலாண்மைச் சட்டங்கள், பங்குச் சந்தை விதிகள் மாற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் நிதி ஆலோசகர்கள் உறக்கம் தவிர்த்து உழைத்ததில் உலகம் நாள் முழுதும் இயங்கத் தொடங்கியது.

குறித்த நேரத்தில் தரமான சேவை, திறமையான நிதி நிர்வாகம், உலகளாவிய விளம்பரம், வணிகத்தில் நேர்மை என உலகில் காணக் கிடைக்காத அற்புதக் கலவை சிங்கப்பூரை உலக அரங்கில் அதிசயங்கள் நிறைந்த கனவு தேசமாக நிலை நிறுத்தியது. ‘மெர்லயன்’ என்ற சிங்க முகமும், மீனின் உடலும் கொண்ட சிங்கப்பூரின் தேசியச் சின்னம், ஒரு சிறு துறைமுக நகரம் உலக அரங்கில் தலைசிறந்து விளங்குவதை மிகச் சரியாகக் குறித்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் எழில் மிகு நங்கை உருவம் விருந்தோம்பலின் நளினத்தையும் வணிகத்தின் நேர்த்தியையும் ஒருங்கிணைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

உலகின் தலைசிறந்த வணிகத் தலைநகராக சிங்கப்பூரை உருவாக்க முனைந்த லீ குவான் யூ, அதே அளவு ஆர்வத்தை மக்கள் நலத் திட்டங்களை உருவாக்குவதிலும், சுற்றுச் சூழல் காப்பதிலும் காட்டினார் என்பதுதான் முக்கியம்.

ஒரு பக்கம் சிங்கப்பூரை ஒட்டிய 80 தீவுகளிலும் கடலிலிருந்து நிலத்தை மீட்கும் முயற்சி; மழை நீரை முழுமையாகச் சேகரித்து, கழிவு நீரைச் சுத்திகரித்து நீர்த் தேவையை சமாளிக்கும் திட்டங்கள் நிறைவேறின. சிங்கப்பூர் நகரில் ஓடும் அசுத்தமான நதியைச் சுத்தமாக்கி மீன்கள் வளர்க்க வேண்டும் என்பது லீயின் கனவு. அதைக் கேள்விப்பட்ட லீயின் சகாக்களே நிறைவேற்ற முடியாத திட்டம் என எள்ளி நகையாடினர். அவ்வளவு செலவு செய்வதற்குப் பதில் அவ்வப்போது மீன்கள் வாங்கி விடலாம் என்ற குரூர யோசனை வேறு. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கிய ,லீ பொறியாளர்கள் துணையோடு சில வருடங்களிலேயே சிங்கப்பூர் நதியைத் தூய்மையாக்கிக் காட்டினார். நகரெங்கும் பசுமையான புல்வெளிகள் அடர்ந்த மரங்கள் உருவாக்கிட தலைசிறந்த தாவரவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மண்ணின் தரம், மழையளவு, தேவைப்படும் உரம் என ஆலோசனைகள் பெற்று வெப்ப மண்டல மழைக் காடுகளுக்குரிய தாவரங்கள் உலகின் பல நாடுகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டன.

மறுபுறம் குடிமக்களுக்குத் தரமான கல்வி, சுகாதாரம், அனைவருக்கும் சொந்த வீடு, தொழிலாளருக்குப் பொது நிறுவனங்களின் பங்குகள் என நலத்திட்டங்கள் விரிந்தன. `பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேவரும் குழந்தைகளைப் பார்த்தால் நாளை இவர்களுக்கு என்ன வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரப்போகிறோம்’ என்ற பதற்றம்தான் எங்களைத் தொடர்ந்து இயங்க வைத்தது என்று ஒரு முறை லீ குவான்யூ கூறினார். ஒவ்வொரு துறையிலும் திறமைமிக்கவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொண்டார். அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து இயங்க வைத்து, `பெற்ற வெற்றிக்குக் காரணம் அவர்களே’ என்று கூறி அழகு பார்த்தவர். தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு இணையாக அதிக சம்பளம். அதே சமயம் ஊழலில் ஈடுபட்டால் கடும் தண்டனை. இதுதான் அவருடைய தாரக மந்திரம்.

தெருக்களில் அசுத்தம் செய்தால் அபராதம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் வாகனங்களுக்கு அதிக கட்டணம், குடும்பக் கட்டுப்பாடு, சிறுபான்மையினரின் கல்வி மேம்பாடு, பட்டதாரிப் பெண்களின் திருமணம் என அவருடைய தொலைநோக்குத் திட்டங்கள் அனைத்தும் காலத்தால் முந்தியவை.

ஒவ்வொரு புதிய யோசனையையும் மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கு விட்டு, பின் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவது அவர் வழக்கம். தொடர்ந்து மக்களுடன் உரையாடிக் கொண்டே இருந்தார். தன்னுடைய 32வது வயதில் சீன மொழியைக் கற்றுக்கொண்ட லீ, தன் குழந்தைகளை சீன மொழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்குத்தான் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் சீன, மலாய் மொழிகளுடன் தமிழையும் ஆட்சிமொழியாக்கிச் சிறப்பித்தார்சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு கணிசமானது. வியர்வை சிந்திய அவர்களின் உழைப்பில் வானளாவிய கட்டடங்கள் கம்பீரமாய் எழுந்து நின்றன. தமிழரின் வணிக நேர்மையில் சிங்கப்பூரின் நம்பகத் தன்மை உயர்ந்தது. தொடக்கம் முதலே லீகுவான் யூவின் முயற்சிகளுக்குத் தோள் கொடுத்த தமிழர் தலைவர்களைக் குடியரசுத் தலைவர், அமைச்சர் என உயர் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்தார். லீ குவான் யூவின் கருணைக் கரங்கள் ஈழத்தமிழர்களின் அவல நிலையைப் போக்கவும் நீண்டது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டில் தனது 92வது வயதில் லீ குவான் யூ மறைந்தபோது உலகத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். ஐந்து லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதேநேரம் தமிழ்நாட்டின் பல கிராமங்கள் சோகத்தில் மூழ்கின. பிறந்த குழந்தைக்கு லீ குவான் யூ என்று பெயரிட்டவர்கள், தங்கள் குடும்பத்தின் தலைமகன் மறைந்ததற்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஊர்வலம் சென்றனர். லீ குவான் யூவிற்கு மணிமண்டபம் கட்ட சில கிராமங்கள் முன்வந்தன. அவர்கள் நடத்திய இரங்கல் கூட்டப் பதாகையின் வாசகத்தில் சோகம் தவழ உண்மை ஒளிர்ந்தது.

`இமயம் சரிந்தது!’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

எதிர்காலத்தில் ஓர் புதிய தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் எனும் பெருங்கனவோடு உதயமாகும் தலைவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் இவை.The Singapore Story

From Third World to First

One Man’s view of the World

The Wit and Wisdom of Lee Kuan Yew.