இந்நூலின் ஆசிரியர் திரு. இராமதுரை ஜெயராமன், மென்பொருள் துறையில் ஆர்க்கிடெக்ட்டாக பணியாற்றும் இளம் எழுத்தாளர். வரலாற்றிலும் தொன்மைகளிலும் ஆழ்ந்த அக்கறையுடன், கற்பனையையும் சாட்சியங்களையும் சுவையாக கோர்த்து சொல்லும் திறமையுடன் இந்த வரலாற்றுப் புதினத்தை உருவாக்கியுள்ளார். கதை ஆறாம் நூற்றாண்டின் பின்பகுதியில் ஆரம்பமாகிறது. கிழக்கு ரோமில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக, தங்கத்தை விட மூன்று பங்கு மதிப்பு மிகுந்த, உலகின் அரிய பொருளான “டிரியன் ஊதா” (Tyrian Purple) நிறமியை பாதுகாப்பாக எகிப்தின் பெரெனிகே துறைமுகத்திலிருந்து, சேர நாட்டின் முசிறி வரை கொண்டு செல்லும் பயணமே கதையின் மையம். இந்தப் பயணத்தில், யவன அதிகாரிகளின் சூழ்ச்சிகள், கடற்கொள்ளையர்களின் சதிகள், மறைமுக தேசநலன்கள், அன்பும் நட்பும் காதலும் கலந்து பின்னப்பட்டுள்ளன. சைரோட்டாக்ஷ் என்ற தளபதியின் வழிகாட்டுதலால் அந்தத் மரக்கலம் பயணிக்க ஆயத்தமாகின்றது. கிளியோபட்ரா மற்றும் சீசர் போன்றோரால் விரும்பப்பட்ட நம்மில் பலர் அறிந்திராத டிரியன் ஊதா நிறமியே கதையின் மையப்பொருளாகும் கதை சாளுக்கியர்களின் வதாபி வரை விரிகிறது. பெரெனிகே துறைமுகம், டிரியன் ஊதா, கிளியோபட்ரா, சீசர் இவை அனைத்தும் கதையின் பின்னணியில் வரலாற்றுச் சாயலுடன் இசைக்கப்படுகின்றன. புத்தம் எகிப்து வரை பரவியிருக்கலாம் என்ற சான்றுகளும் இதில் பிரதிபலிக்கின்றன. அன்பு, நட்பு, நயவஞ்சகம், சமயோஜித புத்தி, சூழ்ச்சி என கதையின் பரிணாமம், வாசகனை ஒரு பயணத்தில் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.